முறைகேடு புகார் எதிரொலி- அச்சுதானந்தன் மகனின் பிஹெச்டி பதிவு ரத்து
திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மகன் கேரள பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதில் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரது பதிவை பல்கலைக்கழக சிண்டிக்கேட் குழு ரத்து செய்துள்ளது.
கேரள முன்னாள் முதல்- மந்திரியும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தனின் மகன் அருண்குமார். இவர் கேரள அரசின் மனித உரிமை ஆராய்ச்சித் துறையில் உயர் அதிகாரியாக உள்ளார். இவர்
கேரள பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பட்டம் பெற பதிவு செய்ததில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பல்கலைக்கழக சிண்டி கேட் குழு அருண்குமார் மீதான புகார் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வில் அருண்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. எனவே அவரது விண்ணப்ப பதிவு தகுதி இல்லாதது என சிண்டிகேட் குழு முடிவு செய்து அவரது பதிவை ரத்து செய்துள்ளது.
புதிய அறிவிப்பு
கேரள பல்கலைக்கழகம் கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பின் படி 7 வருடம் ஆசிரியர் பணி முடித்தவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வு இல்லாமல் பிஹெச்டி பட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில்தான் அருண் குமார் டாக்டர் பட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இதில்தான் அருண்குமார் முறை கேடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்தே அவரது பதிவை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற பின்னர் அருண் குமார் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.