மோடியைக் கொல்ல பெண் உள்பட 2 தீவிரவாதிகளை அனுப்பிய பாக்.!
கடந்த 5ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த சூஃபியா கன்வால்(38) மற்றும் இம்ரான்(40) ஆகிய தீவிரவாதிகள் டெல்லி ரயில்வே நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் இந்தியாவில் நாசவேலை மேற்கொள்ள வந்துள்ளனர். இருவரும் அகமதாபாத்தில் உள்ள அக்ஷர்தம் கோவில், டெல்லி, ஆக்ராவில் உள்ள கன்டோன்மென்ட் பகுதிகளைத் தகர்க்க திட்டமிட்டிருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லத் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் அந்த திட்டத்தை பற்றி போலீஸ் விசாரணையில் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து குஜராத் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த 2 பேருக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளித்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், ஜெய்ஷ் இ முகமது ஆகியவை உதவி செய்ததா என்பது குறி்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை போலியான ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டவை என்று போலீசார் தெரிவி்ததனர்.
அண்மையில் பாகிஸ்தான் தங்கள் நாட்டில் நடக்கும் வர்த்தக கூட்டத்தில் கலந்து கொண்டு வியாபாரிகளை ஊக்குவிக்குமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் மோடிக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனியும் மோடி பாகிஸ்தான் செல்வாரா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.