முல்லைப் பெரியாறு: நாளை சட்டசபை அவசர கூட்டம்-தமிழக நலன் காக்க முக்கிய தீர்மானம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி, அதை புதிய அணை கட்டவும் கேரளா முயற்சித்து வருகிறது.
இது தொடர்பாக அந்த மாநில கட்சிகளும், அரசும் பல்வேறு புரளிகளை கிளப்பி வருகின்றன. சமீபத்தில் கேரள சட்டசபையில், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் தீர்மானமும்ம் நிறைவேற்றப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது. முன்பு இருந்தபடியே 142 அடி தண்ணீரை அந்த அணையில் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து கேரளத்தில் தமிழர்கள் மீது சில அரசியல் கட்சியினரும், சமூக விரோதிகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மீதும் கேரள ரவுடிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழர்களின் நிறுவனங்கள், ஏல தோட்டங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் எதிர்விளைவாக தமிழகத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கேரளத்துக்கு செல்லும் உணவுப் பொருட்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. கேரள நிறுவனங்கள் மீது தாக்குதல்களும் நடந்து வருகின்றன.
இரு மாநிலங்களிலும் பிரச்சனை வலுவடைந்து வரும் நிலையில் தமிழக அரசு நாளை அவரச சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. அதில் அணை தொடர்பாக முக்கிய தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக லண்டனில் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சபாநாயகர் டி.ஜெயக்குமார் தமது சுற்றுப் பயணத்தை இடையிலேயே முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிவிட்டார்.
நாளை பகல் 11 மணியளவில் தமிழக சட்டப் பேரவையின் அவசர கூட்டம் தொடங்க உள்ளது. இக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார் என்று தெரிகிறது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பரப்பப்படும் பீதியின் அடிப்படையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்றரீதியில் இந்தத் தீர்மானம் இருக்கும் என்று தெரிகிறது.
இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளும் பேச உள்ளன. தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட பின் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.