பிற மதத்தினருக்கு காட்டும் சலுகையை கொஞ்சம் கோயில்களுக்கும் காட்டுங்கள்: ராம. கோபாலன்
சென்னை: ஆலயத்தில் இறை சேவையில் ஈடுபட்டு தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வருகிற பூசாரிகள், அர்ச்சகர்கள், குருக்கள், ஓதுவார் மூர்த்திகள், வாத்தியக்காரர்கள், பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் முஸ்லீம் மதகுருமார்களான உலமாக்கள், முல்லா, மௌல்விகளுக்கான ஓய்வு ஊதியத்தை உயர்த்தியும், வக்ஃப் வாரியத்திற்கு வழங்கும் மானியத்தை உயர்த்தியும், முஸ்லீம்களுக்குத் தமிழக அரசு அளிக்கும் ஹஜ் யாத்திரை நிதியுதவியை இரட்டிப்பாக்கியும் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு சிறுபான்மை சலுகை என்ற பெயரில் ஓட்டு வங்கியைக் கவனத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளதா? மதநல்லிணக்கத்துக்காகச் செய்யப்பட்டுள்ளதா?
இந்து ஆலயங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு வசூலாகும் வருமானத்தை எண்ணவும், கணக்கிடவும், நிர்வகிக்கவும் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. ஆனால் ஆலயத்தில் இறை சேவையில் ஈடுபட்டு தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வருகிற பூசாரிகள், அர்ச்சகர்கள், குருக்கள், ஓதுவார் மூர்த்திகள், வாத்தியக்காரர்கள், பணியாளர்களுக்கு மிகவும் சொற்ப சம்பளமே இன்னமும் அளிக்கப்பட்டு வருகிறது. பல கோயில்களில் ஒருசில பணியாளர்களைக் கொண்டே பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆகம முறைப்படி இருக்க வேண்டிய கோயிலில் பணியாற்றுவோர் எண்ணிக்கையை அரசு நியமிக்க உத்தரவிட வேண்டும். அவர்களுக்குரிய சம்பளம், ஓய்வு ஊதியம் மற்றும் சலுகைகள் இன்றைய விலைவாசிக்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும். கோயில் பக்தர்களுக்குச் செய்து தரவேண்டிய வசதிகளுக்கு மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் நிதி ஒதுக்கீட்டை அறிவித்து முடிக்க வேண்டும். கோயில் பணத்தில் இருந்து ஊர்ப் பொதுக் காரியம் செய்யக்கூடாது. கோயிலுக்கு வரும் பக்தர்களால் தான் பல ஊர்கள் அதிக வருமானம் பெறுகின்றன. அதற்குரிய வசதிகளைச் செய்ய உள்ளாட்சி அமைப்புகள் முன் வரவேண்டும்.
மற்ற மதத்தினரிடம் காட்டும் சலுகைகளையாவது கோயில்களுக்கும், கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களிடமும் காட்டுங்கள் என்று கேட்கும் அவலநிலையைப் போக்கிட தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.