முல்லைப் பெரியாறு விவகாரம்: குமுளி நோக்கி சென்ற காங். எம்.பி. ஆரூண் உள்பட 350 பேர் கைது
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கக் கோரியும் காங்கிரஸ் எம்.பி. ஆரூண் தலைமையில் திரளானவர்கள் தமிழக எல்லையில் உள்ள குமுளி நோக்கிச் சென்றனர். அத்துமீறி குமுளிக்குள் நுழைய முயன்ற ஆருண் உள்பட 350 கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குமுளி நோக்கி திருமா நாளை நடைபயணம்:
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நாளை தேனியில் இருந்து குமுளி நோக்கி நடைபயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள ஆட்சியாளர்களும், கேரள அரசியல்வாதிகளும் திட்டமிட்டு உருவாக்கி வரும் பதற்றநிலையை இப்போது உச்ச நீதிமன்றம் சற்றே தணித்திருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது தமிழக மக்களுக்கு சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கேரளத்தவர்கள் செய்திருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டின் உரிமையை காக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு தொடுத்துள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க எனது தலைமையில் நாளை காலை 10 மணிக்கு தேனியில் இருந்து குமுளி நோக்கி நடைபயணம் நடைபெற உள்ளது.
இன்றைய தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, அவரது தலைமையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.