நடப்புக் கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா - பிரதமர் மன்மோகன் சிங்
ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பும் வழியில், தனது சிறப்பு விமானத்தில் பத்திரிகை நிருபர்களைச் சந்தித்தார் மன்மோகன் சிங்.
அப்போது அவர் கூறுகையில், "லோக்பால் மசோதாவை இந்த தொடரிலேயே அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.
மசோதாவை ஒரு வடிவமைப்புக்குள் கொண்டு வரும் பணி இரவு பகலாக நடக்கிறது. நாளை அமைச்சரவையில் இந்த மசோதா குறித்து விவாதித்துவிட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். தாக்கல் செய்வதோடு எங்கள் வேலை முடிந்துவிடுகிறது. அதன் பிறகு பாராளுமன்றம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது," என்றார் பிரதமர்.
முன்னதாக, ஊழலுக்கு எதிரான லோக்பாலை இந்த தொடரிலேயே கொண்டுவருவதா நீங்கள் அளித்த உறுதியை காப்பாற்ற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அன்னா ஹஸாரே கடிதம் எழுதியிருந்தார். குறிப்பாக சிபிஐ இந்த லோக்பால் வரம்புக்குள் வந்தாக வேண்டும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஜெயில் நிரப்பும் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதத்தில் குதிப்பதாக அவர் தனது கடிதத்தில் மிரட்டியிருந்தார்.
ஆனால் இந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே, மன்மோகன் சிங் லோக்பால் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.