நாடாளுமன்றத்தில் இன்று லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது
டெல்லி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா ஒரு வழியாக இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா குறித்து விவாதிப்பதற்காகவே இன்றுடன் நிறைவடைய வேண்டிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை லோக்பால் மசோதா குறித்த விவாதம் நடக்கிறது.
அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவில் அன்னா குழுவினருக்கு திருப்தியில்லை. அரசு மக்களை ஏமாற்றுவதாக அன்னா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வலுவான லோக்பால் மசோதா கோரி வரும் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா அறிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டால் உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் கூடிவிடும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சமாஜ்வாடி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
இந்த லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ இல்லாதது அன்னா ஹசாரேவை உண்ணாவிரதம் இருக்கத் தூண்டியுள்ளது. சிபிஐ இல்லாவிட்டால் லோக்பால் வலுவானதாக இருக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.