ஹசாரேவுக்கு கடும் காய்ச்சல்- உண்ணாவிரதத்தை தொடர்கிறார்
மும்பை: மும்பையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே கடும் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.
வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஹசாரே மும்பையில் 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்.
ஏற்கனவே வைரஸ் காய்ச்சல், சளி பிரச்சனை மற்றும் இருமல் இருந்ததால் ஹசாரே சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து உடல்நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிடுமாறு அன்னா ஹசாரேவை, அவருடைய குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதை அவர் ஏற்காமல் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனால் நேற்றிரவு அவரது உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மும்பை ஜே.ஜே. மருத்துவமனை டாக்டர்கள் குழு உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து, ஹசாரேவின் உடல்நிலையை பரிசோதித்தது. அவருக்கு காய்ச்சல் அதிகரித்திருப்பதோடு, ரத்த அழுத்தமும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட ஹசாரே மறுத்து விட்டார். மருத்துவமனைக்குச் செல்லவும் மறுத்துவிட்டார்.
இந் நிலையில் இன்று அவருக்குக் காய்ச்சல் குறைந்துள்ளது.
இதற்கிடையே அன்னா ஹசாரேவை மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.