கிங்பிஷர் நிறுவனத்திற்கு, சகாரா குழுமம் ரூ.750 கோடி நிதியுதவி செய்ய உடன்பாடு?
மும்பை: கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கிங்பிஷர் நிறுவனத்துக்கு, சகாரா நிறுவனம் ரூ.750 கோடி நிதியுதவி செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் தெளியாகி உள்ளது.
தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. கிங்பிஷர் நிறுவனத்தில் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் ரூ. 2,000 கோடி வரை முதலீடு செய்துள்ளன.
இந்த நிலையில் கிங்பிஷர் நிறுவனத்திற்கு, சகாரா பரிவார் குழுமம் ரூ.750 கோடி நிதியுதவி செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கிங்பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா மற்றும் சகாரா பரிவார் குழுமத்தின் தலைவர் சுப்பிரதா ராய் உள்ளிட்டோர் நேரடியாக சந்தித்து கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த கடன் தொகைக்கான வட்டி, எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை. கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கு இடையிலான முதலீடு (இன்டர் கார்ப்ரேட் டெபாசிட்) என்ற முறையில் இந்த கடன் தொகை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த முறையில் ஒரு கார்ப்ரேட் நிறுவனம் இன்னொரு கார்ப்ரேட் நிறுவனத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் உதவி செய்யும்.
இந்த முறையில் வழங்கப்படும் கடன் தொகைக்கு ஈடாக அதிக வட்டி வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் சகாரா குழுமம் மற்றும் கிங்பிஷர் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஒப்பந்தம் குறித்து 2 நிறுவனங்களின் தரப்பில் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
அந்த செய்தியை மறுத்து இ-மெயில் அனுப்பி உள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கிங்பிஷர் நிறுவனம் தனது வர்த்தகத்தை புனரமைக்கும் வகையில், ஸ்டேட் வங்கியிடம் (எஸ்பிஐ) இருந்து ரூ.680 கோடி கடன் பெற்றது.
ஆனால் அந்த தொகைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்த முடியாமல் கிங்பிஷர் திணறி வருகின்றது. இந்த டிசம்பர் வரை கிங்பிஷர் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ.260 கோடி முதல் ரூ.280 கோடி வரை இருக்கலாம் என்று ஸ்டேட் வங்கி கணக்கிட்டு உள்ளது. கிங்பிஷர் நிறுவனத்திற்கு சுமார் ரூ.7,000 கோடி கடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.