பொங்கலன்று சென்னை வரும் அத்வானி, மோடி: ஜெ.வை சந்திப்பாரா மோடி?
சென்னை: பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகியோர் வரும் 14ம் தேதி அதாவது பொங்கல் பண்டிகை அன்று சென்னை வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவர் அத்வானியும், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும் வரும் 14ம் தேதி சென்னை வருகின்றனர். அவர்கள் அன்று மாலை சென்னையில் நடக்கும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்துகொள்கின்றனர்.
அதன் பிறகு அண்மையில் மரணம் அடைந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நம்பியார் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் அவர்கள் அன்றிரவே டெல்லிக்கு புறப்படுகின்றனர்.
பிரதமர் பதவிக்கு அத்வானியும், மோடியும் குறி வைத்துள்ளனர் என்று பேசப்படுகிறது. அண்மையில் அத்வானி ரதய யாத்திரை மேற்கொண்டபோது கூட மோடியை சந்திக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து தமிழகம் வருகின்றனர்.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க மோடி அறிவுரை வழங்கினார் என்றும் கூறப்பட்டது. தற்போது சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மோடி சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சென்னை வருகையின்போது முதல்வர் ஜெயலலிதாவை மோடி சந்திப்பாரா என்பது தெரியவில்லை.