புதிய மருத்துவ காப்பீடு திட்டம்-தொடங்கி வைத்தார் ஜெ.

2011 மே 16-ம் தேதி அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அ.தி.மு.க. அரசு இப்போது கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரம் வரை உள்ள மக்கள், தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறலாம் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
1.34 கோடி மக்கள் பயன்
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 1.34 கோடி மக்கள் பயன் பெறுவர்.
பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,016 சிகிச்சை முறைகள், 113 தொடர் சிகிச்சை முறைகள், 23 நோய் கண்டுபிடிப்பு முறைகள் ஆகியவற்றுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும், காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். அறுவைச் சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் செலவழிக்கப்பட்ட கட்டணத் தொகை வழங்கப்படும்.
பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். பயனாளிகளுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
இலவச சிகிச்சை
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து 5 நாள்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மற்ற விவரங்களை அறிவதற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட மையங்கள் அல்லது 24 மணி நேர இலவச தொலைபேசி சேவையான 180042 53993 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடந்த தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனமான ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
இத்திட்டத் தொடக்க விழா இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications