கமிஷனர் அலுவலகத்தில் மாணவிக்கு சரமாரி அடி-வக்கீலுக்கு 'சில்லுமூக்கு' உடைந்தது!
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குப் புகார் கொடுக்க வந்த தங்களது மகளையும், அவருடன் வந்திருந்த வக்கீலையும் பெண்ணின் பெற்றோர் சரமாரியாகத் தாக்கினர். இதில் வக்கீலின் சில்லுமூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, புழுதிவாக்கம் செங்கழனி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகள் கவிதா (20). மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படிக்கிறார். நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வக்கீல் சண்முகராஜனுடன் வந்தார். கமிஷனர் அலுவலக வரவேற்பு அறையில் கவிதாவும், வக்கீலும் பெயர் பதிவு செய்து காத்திருந்தனர்.
அப்போது, கவிதாவின் தந்தை குப்புசாமி, தாய் மைதிலி மற்றும் உறவினர்கள் 3 பேர் கமிஷனர் அலுவலகம் வந்து கவிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் வக்கீலை தாக்கினர். இதில் அவரது சில்லு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
மேலும் கவிதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கினர். இதனால் வரவேற்பு அறையில் இருந்த பெண் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வந்து அவர்களை தடுக்க முயன்றனர். ஆனாலும் கவிதாவின் உறவினர்கள் தொடர்ந்து தாக்கினர்.
பின்னர் மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் வந்து, அவர்களை ஜீப்பில் ஏற்றி எழும்பூர் போலீஸ் நிலையம் அனுப்பி வைத்தார். காயம் அடைந்த வக்கீல் சண்முகராஜன் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரணைக்காக கவிதாவும் அழைத்து செல்லப்பட்டார்.
என்ன நடந்தது என்பது குறித்து கவிதா போலீஸாரிடம் கூறுகையில்,
பத்தாம் வகுப்பு படிக்கும் போதே, எனக்கு 52 வயதுள்ளவரை திருமணம் செய்ய பெற்றோர் முயற்சி செய்தனர். என் வகுப்பு ஆசிரியர் தலையிட்டு தடுத்து என்னை தொடர்நது படிக்கச் செய்தார்.
இந்த நிலையில், கல்லூரியில் படித்து வரும் என்னை, என்னை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்க ரகசிய ஏற்பாடுகளை செய்கின்றனர். கல்லூரிக்கு செல்லவிடாமல் அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகின்றனர்.
வீட்டை விட்டு தப்பித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் உறவினர்களை அழைத்து சமாதானம் செய்தனர். நான் போக மறுத்ததும் என் மீது விபசார வழக்கு போட்டு சிறையில் அடைப்போம் என பெண் போலீசார் மிரட்டினர்.
அதன்பின் கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். பாதுகாப்பு கருதி எனது கல்லூரி பேராசிரியை வீட்டில் தங்கி இருந்தேன்.
அப்போது என்னை காணவில்லை என கூறி பெற்றோர் மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதனால் எனது வக்கீலுடன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தேன். போலீசார் எனக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கதறியழுதபடி கூறினார்.
ஆனால் தனது மகள் பொய் சொல்கிறார் என்று கவிதாவின் தந்தை குப்புசாமி கூறினார்.
அவர் கூறுகையில்,
சிலரது பேச்சை கேட்டுக் கொண்டு எங்கள் மீது பொய் புகார் கொடுக்கிறார். ஏற்கனவே வேறு ஒருவருடன் அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. நான் செக்யூரிட்டி வேலை பார்த்து தான் படிக்க வைக்கிறேன். பாசமாக வளர்த்த என் மீதே இப்படி பொய் புகார் கொடுப்பதை நினைத்தால் நெஞ்சு வலிக்கிறது. வயதானவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய கவிதாவின் தந்தை குப்புசாமி, தாய் மைதிலி, பெரியப்பா கஜேந்திரன், பெரியம்மா கஜலட்சுமி, அண்ணன் மணி ஆகியோர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரையும் போலீசார் எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் கீதாராணி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தாக்குதலுக்குள்ளான சண்முகராஜனின் மனைவி கல்லூரி பேராசிரியை. இவரது வீட்டில்தான் தஞ்சமடைந்திருந்தார் கவிதா. இதுகுறித்து சண்முகராஜன் கூறுகையில்,
எனது மனைவி தான் கவிதாவுக்கு பேராசிரியை. சில நாட்களுக்கு முன்பு கவிதா என் மனைவியிடம் வந்து வீட்டில் பெற்றோர், வயதானவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வதாக கூறினார். இதுபற்றி நானும் அறிந்தேன்.
எங்களிடம் கவிதா அடைக்கலம் கேட்டார். அதனால்தான் கவிதாவுடன் புகார் கொடுக்க கமிஷனர் அலுவலகம் வந்தேன். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலேயே அவர்கள் தாக்குதல் நடத்தியது கொடுமையான செயல் என்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.