புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா மரக்கன்றுகள் – ஜெ. அறிவிப்பு
சென்னை: ‘தானே’ புயலால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு விலையில்லா மரக்கன்றுகளையும், ஒராண்டுக்கு பராமரிப்பு செலவும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
தானே புயல் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 1.76 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்களும், 0.48 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட தோட்டக்கலை பயிர்களும், ஆக மொத்தம் 2.24 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இதன் விளைவாக, விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களது பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பயிர் சேதங்களுக்கு மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறையில் குறிப்பிட்டுள்ளதை விட அதிகமான நிவாரணத் தொகை வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். பயிர் இழப்புகளுக்காக மட்டும் 210 கோடி ரூபாய் அளவுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.
விலை இல்லா மரக்கன்றுகள்
பயிர் சேதங்களுக்காக நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டாலும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களின் மூலம் வருவாய் ஈட்டி வந்த விவசாயப் பெருங்குடி மக்களின் துயர் துடைத்திட இயலாது. எனவே, புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு நிவாரண தொகுப்பு உதவி வழங்க நான் முடிவு செய்துள்ளேன். இதன்படி, புயலால் முற்றிலும் சேதமடைந்த பலா, முந்திரி மற்றும் தென்னை ஆகிய தோட்டக்கலைப் பயிர்களை மீண்டும் பயிர் செய்வதற்கு விலை ஏதுமின்றி மரக்கன்றுகள் வழங்கப்படும். இவற்றை பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புச் செலவுகள் மற்றும் விவசாயப் பணிகளுக்கான செலவுகள் அரசால் ஓராண்டு காலத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
விவசாயிகளுக்கு ஊதியம்
விவசாய வேலையாட்களுக்கான செலவுகள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும். தங்கள் சொந்த நிலங்களில் நில மேம்பாடு, குழி எடுத்தல் போன்ற விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தின் படி ஊதியம் வழங்கப்படும். இந்த விவசாயிகள், உளுந்து, பாசிப் பயிறு, சிறு தானியங்கள் மற்றும் வேர்கடலை போன்ற ஊடு பயிர்கள் சாகுபடி செய்து வருமானம் ஈட்டும் வகையில், இவற்றை பயிரிடுவதற்கான சான்று விதைகள், உயிர் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை விலை ஏதுமின்றி ஓராண்டு காலத்திற்கு வழங்கப்படும்.
நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு, சான்று விதைகள், உயிர் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை விலை ஏதுமின்றி வழங்கப்படும். இந்த உதவித் தொகுப்பின் மூலம் சுமார் 3.45 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர். இதன் மூலம் அவர்கள் புயலால் இழந்த வாழ்வாதாரத்தை திரும்பப் பெற இயலும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.