பொங்கலுக்கு முன் நிவாரணத் தொகை, மின்சாரம்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து வீடுகளுக்கும் மின் வினியோகம் அளிகக்வும், நிவாரணத் தொகை வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
‘தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புயலினால் கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 664 ஹெக்டேர் நிலப்பரப்பிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 257 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிவாரணத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
புயலினால் கடலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 84 ஆயிரம் குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் குடிசைகளை இழந்த 2 லட்சம் பேருக்கும், ஓட்டு வீடுகளை இழந்த 31,000 பேருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மீதமுள்ள 1 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கும் இன்னும் இரண்டு நாள்களில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் சேதமடைந்த 39, 790 குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் 16,014 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 23,776 பேருக்கு இன்னும் இரண்டு நாள்களில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்சாரம் இல்லாத இடங்களில் ஜெனரேட்டர் உதவியுடனும், லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஜெனரேட்டர் மற்றும் லாரிகளில் பழுது ஏற்பட்டாலும் தடையின்றி குடிநீர் வழங்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 5 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு 18,000 மின் கம்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் இருந்தும், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும் மேலும் 12,000 மின் கம்பங்களை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மின்சார சீரமைப்புப் பணிகளில் மின்சார வாரியத்தைச் சேர்ந்த 3,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர பிற மாவட்டங்கள் மற்றும் உள்ளூரில் இருந்து மேலும் 5,000 நபர்களை பணியமர்த்தவும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் விநியோகம் அளிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications