பொங்கல் சிறப்பு ரயி்ல்களுக்கான டிக்கெட் 15 நிமிடத்தில் காலியானது
சென்னை: பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஆனால் 15 நிமிடங்களிலேயே அத்தனை டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து விட்டதால் அதிகாலை முதல் காத்திருந்த பயணிகள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து வழக்கமான ரயில்களும் எப்போதோ நிரம்பி விட்டன. இதையடுத்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. சென்னையிலிருந்து நாகர்கோவில், கோவை ஆகிய ஊர்களுக்கான சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
இப்போதெல்லாம் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து விடுவதால் அதிகாலை முதலே பயணிகள் காத்திருந்தனர். ஆனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 15 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்களும் தீர்ந்து விட்டன. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
கால் கடுக்க காத்திருந்து டிக்கெட் கிடைக்கவில்லையே என்ற பெரும் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்றனர். சிறப்பு ரயில்களும் நிரம்பி விட்டதால் ஊருக்குப் போக கூடுதல் சிறப்பு ரயி்ல்கள் அல்லது கிடைக்கும் பஸ்களில் ஏறிப் போக வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற முக்கியப் பண்டிகைகளின்போது, சிறப்பு ரயில்களுக்கு மட்டுமாவது ஆன்லைன் புக்கிங்கை நிறுத்தி வைத்தால் கால் கடுக்க காத்திருந்து டிக்கெட் வாங்க வரும் மக்களுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.