ஜன. 13ம் தேதி சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பகல் நேர சிறப்பு ரயில்
சென்னை: பொங்கல் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து ஜனவரி 13ம் தேதி சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பகல் நேர சிறப்பு ரயில் ஒன்று விடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. இதற்காக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல அனைத்து ரயில்களிலும் மக்கள் டிக்கெட் எடுத்து விட்டனர். சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு அவையும் கூட நிரம்பி விட்டன.
இந்த நிலையில் கூடுதல் ரயில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ஜனவரி 13ம் தேதியன்று ஒரு பகல் நேர சிறப்பு ரயில் விடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வைகை எக்ஸ்பிரஸ் போல இந்த பகல் நேர சிறப்பு ரயிலில் இருக்கை வசதி மட்டும் இருக்கும். மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்படும். 5 முன்பதிவுப் பொட்டிகளும், 13 பொதுப் பெட்டிகளும் கொண்டதாக இது இருக்கும். ரயில் ஜனவரி 13ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
ஜனவரி 17ம் தேதி மறு மார்க்கத்தில்
மறு மார்க்கத்தில் ஜனவரி 17ம் தேதி நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.