சபரிமலை: பொன்னம்பல மேடு நோக்கி ஊர்வலமாக சென்ற தந்திரியின் பேரன் உள்ளிட்ட 1,000 பேர் கைது
சபரிமலை: மகர விளக்கு ஏற்றப்படும் பொன்னம்பல மேட்டினை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற சபரிமலை தந்திரி மகன் ராகுல் ஈஸ்வர் உள்ளிட்ட ஆயிரம் பேரை ஞாயிறன்று போலீசார் கைது செய்தனர்.
சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் ஆண்டுதோறும் தை ஒன்றாம்நாள் மகரவிளக்கு ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா ஞாயிறுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. மகரஜோதி விழாவானது சபரிமலையில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு செயற்கையானது என்றும் மலைவாழ் மக்கள் தான் விளக்கேற்றி வழிபடுகின்றனர் என்றும் சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மலைவாழ் மக்கள் தீபம் ஏற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு தடை விதித்தது.
இந்த நிலையில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த மலை அரைய மகா சபா, ஐக்கிய மூல அரைய மகா சபா போன்ற மலைவாழ் மக்கள் சங்கங்கள் தேவசம் போர்டு மகரவிளக்கு ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மலைவாழ் மக்கள் மகரவிளக்கை ஏற்றுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ஞாயிறன்று தந்திரியின் பேரன் ஈஸ்வர் மற்றும் மலை அரைய மகாசபாவை சேர்ந்தவர்கள் பொன்னம்பல மேட்டினை நோக்கி ஊர்வலமாக செல்லமுயன்றபோது எரிமேலி அருகே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஈஸ்வர், நாங்கள் வன்முறை சம்பவங்களில் எதுவும் ஈடுபடவில்லை. உரிமையை பாதுகாக்க கோரி ஊர்வலமாக சென்றபோது கைது செய்ப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார். மகரவிளக்கு ஏற்றுவது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தேவசம் போர்டுக்கு உரிமை:
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் வி.எஸ். சிவக்குமார், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு மட்டுமே மகரவிளக்கு ஏற்ற உரிமை உண்டு என்று கூறினார். பலவித சர்ச்சைக்கிடையே ஞாயிறு மாலையில் மகரவிளக்கு ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.