ரூ. 231 கோடி செலவில் கணினி மயமாகும் வணிக வரித்துறை: ஜெயலிலதா உத்தரவு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மக்களுக்கான திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் வலுவான நிதி ஆதாரங்கள் மூலம்தான் செயல்படுத்த முடியும். மாநில அரசின் வரிவசூல் மூலம் ஈட்டுகின்ற நிதி ஆதாரத்தைக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் மொத்த வருவாயில் மூன்றில் இரண்டு பங்கினை ஈட்டித்தருவது வணிக வரித்துறையாகும். இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கும் தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவதில் இத்துறை முக்கியமான பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வணிக வரித்துறையின் பணிகளில் அடிப்படைப் பணிகள் மட்டுமே கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
இதனை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது பெருகி வரும் வணிக பரிமாற்றங்களுக்கு ஏற்ப துறையின் செயலாக்கத்திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இத்துறையின் அனைத்து பணிகளையும் முழுவதுமாக கணினி மயமாக்க உத்தரவிட்டுள்ளார். இந்த முழு கணினி மயமாக்கலினால், வரி செலுத்துபவர்களுக்கு தேவைப்படும் அனைத்து விவரங்களும் காலந்தோறும் புதுப்பிக்கப்படுவதால், அவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெற்றுக்கொள்ள ஏதுவாக அனைத்து நாட்களிலும் 24 மணிநேரம் செயல்படக்கூடிய உதவி மையம் அமைக்கப்படும்.
இதனால் வணிகர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இடையேயான நேரடித் தொடர்புகள் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இத்துறையின் அனைத்து செயல்பாடுகளும் கணினி மயமாக்கப்படுவதால் அனைத்து விவரங்களும் வரி செலுத்துபவர்களுக்கு கணினி வழியாக கிடைக்கும். இதனால் வெளிப்படையான மற்றும் ஒளிவுமறைவற்ற நிர்வாகம் நடைபெறுவதற்கு வழிவகை ஏற்படுகிறது. மேலும், கணினிமயமாக்கலினால் கணினி மூலம் அனைத்து செயல்பாடுகளையும் கண்டறிதல் மற்றும் இடர்பாடு இல்லா தணிக்கைகள் செய்தல், வங்கிகள், கருவூலம், பிற மாநில வரி நிர்வாகங்கள், வருமான வரித்துறை ஆகிய பிற அரசுத்துறைகளுடன் அதிக அளவில் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகிய பணிகள் விரைவாக செயல்படுத்த இயலும்.
மேலும் துறையின் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுவதாலும், ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுவதாலும், பணியாளர்களின் பணிச்சுமை குறைவதுடன், பணிநேரமும் மிச்சப்படுவதால், பணியாளர்கள் தங்களுடைய மிகுதியான நேரத்தை துறையின் வேறு முக்கிய பணிகளுக்கு பயன்படுத்தலாம். கணினிமயமாக்கலின் மூலம் துறைக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களும் கிடைப்பதற்கு ஏதுவாக மேலாண்மை தகவல் முறை மற்றும் தகவல் சேகரிக்கும் தரம் உயர்த்தப்படுவதால், துல்லியமான தகவல் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தெளிவான முடிவெடுக்கப்படும்.
இதன் மூலம் வரி வசூல் அதிகரிப்பதற்கும், வரி ஏய்ப்பினை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க இயலும். இந்த முழு கணினிமயமாக்கும் திட்டத்தினை 230 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் 93 கோடியே 40 லட்சம் ரூபாய் மூலதன செலவாகவும், மீதமுள்ள தொகை ஐந்து ஆண்டு கால கட்டத்திற்குள் தொடர் செலவினமாகவும் மேற்கொள்ளப்படும்.
இந்த முன்னோடி திட்டத்தினை 14 மாத காலத்திற்குள் செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். கணினிமயமாக்கல் சம்பந்தமாக துறை அலுவலர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். மேலும் வரிசெலுத்துவோருக்கும் இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் செயல் படுத்தப்படுவதை கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையிலான ஒர் உயர்மட்ட அதிகாரக் குழுவினை ஏற்படுத்தி முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இக்குழுவில் நிதித்துறை முதன்மைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் மற்றும் வணிகவரி ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், வணிகவரித் துறையை சார்ந்த இணை ஆணையர் (கணினி) அவர்கள் உறுப்பினர்- கூட்டுநர் ஆகவும் செயல்படுவார்கள்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் வரி செலுத்துபவர்களுக்கு உரிய விவரங்கள் எந்த நேரத்திலும் கிடைக்கப்பெறுவதுடன், அரசும் வரி ஏய்ப்பவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம், அரசுக்கு வருவாய் அதிகரிப்பதற்கும் வழிவகை ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.