சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு கடத்த இருந்த 5 சாமி சிலைகள் மீட்பு: ஒருவர் கைது
சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு 5 சாமி சிலைகளை கடத்த முயன்ற நபர், விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கினார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் விமானம் நேற்று இரவு புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சாமி சிலைகள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தராஜுலு(35) என்பவர் பெரிய அட்டைப் பெட்டிகளுடன் விமான நிலையத்திற்கு வந்தார். அவரிடம் விசாரித்த போது, தான் பேங்காக் செல்வதாகவும், தனக்கு தேவையான பொருட்கள் அட்டைப் பெட்டியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வுத் துறையினர் அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தனர். அதற்குள் இருந்த இன்னொரு அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 5 சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளின் மதிப்புகளை அறிய தொல்லியல் துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.
விசாரணையில், சிலைகளை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததாகவும், பேங்காக்கில் உள்ள தனது நண்பர்களுக்காக சிலைகளை எடுத்துச் செல்வதாகவும் கோவிந்தராஜுலு தெரிவித்தார். இது குறித்து அவரிடம் மேலும் விசாரமை நடந்து கொண்டிருக்கிறது.