ரூ.380 கோடி செலவில் நாகை துறைமுகம் மேம்பாடு - முதல்வர் ஜெயலலதா உத்தரவு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாதது துறைமுகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. துறைமுக மேம்பாடும், தொழில் வளர்ச்சியும் ஒன்றொடொன்று இணைந்துள்ளது. இதனால் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பின் மூலம் சிறு துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தை பொது மற்றும் தனியார் கூட்டாண்மையில் ரூ.380 கோடி செலவில் அனைத்து பருவகால நிலைக்கேற்ப ஆழ்கடல் கப்பலனை மற்றும் பசுமை சூழலுடன் கூடிய துறைமுகமாக மேம்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் துவங்கும் முதல் ஆண்டில் சுமார் 10 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு, அதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடி வருமானம் கிடைக்கும்.
இது படிப்படியாக வளர்ச்சி பெற்று 25வது ஆண்டில் சுமார் 60 லட்சம் டன் சரக்குகள் கையாளும் நிலைக்கு உயரும். இதன்மூலம் சுமார் ரூ.120 கோடி வருவாய் கிடைக்க வழிவகை ஏற்படும்.
தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள இத்துறைமுகத்தை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான அத்தியாவசிய துறைமுக இணைப்பு வசதி இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் இத்திட்டத்தின் மூலம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள இப்பகுதிகளில் அதிக வேலை வாய்ப்பு வசதியும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.