விவசாயிகளுக்கு கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலை சீரமைப்புக்கு ரூ.83 கோடி மானியம் - முதல்வ
சென்னை: தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையை சீராமைக்கும் வகையில் ரூ.83 கோடி மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூட்டுயர்வே நாட்டுயர்வு' என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்ப, தமிழகத்தின் கிராமப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், கடன் அளித்தல், விவசாய விளைப் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், இடுப்பொருள், நுகர்பொருள் உள்ளிட்டவை நியாயமான விலையில் விற்பனை செய்தல் உட்பட பல்வேறு இன்றியமையாப் பணிகளை கூட்டுறவு வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ஆற்றி வருகின்றன.
பொது மக்களிடமிருந்து பெறப்படும் வைப்புத் தொகை மற்றும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியிடம் பெறப்படும் மறு நிதி உள்ளிட்டவை மூலம் பெறும் நிதி ஆதாரத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவை பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நிதி உதவி அளித்து வருகின்றன. கிராமப்புறங்களில் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா கடன்கள் வழங்குவதே இச்சங்கங்களின் நோக்கமாகும்.
விவசாயத்துறையில் இரண்டாம் பசுமைப் புரட்சி ஏற்படுத்த பாடுபடும் முதல்வர் ஜெயலலிதா வேளாண் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் நிதிநிலைமை சீராக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுள்ளார்.
இதற்காக 175 தகுதியுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மானியமாக ரூ.30 கோடியே 51 லட்சத்து 51 ஆயிரத்து 222 நிதியும், 18 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக ரூ.46 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரத்து 629, மற்றும் 53 தகுதி பெறாத தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக ரூ.5 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 811 என்று மொத்தம் மானியமாக ரூ.82 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரத்து 662 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேலும் மேம்பாடு அடையும், என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.