ஆந்திராவை ஆண்ட முதல்வர்களிலேயே ராஜசேகர ரெட்டிதான் மிகவும் மோசம்-சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு தேசம் கட்சி நிகழ்ச்சியில் பேசும்போதுதான் இவ்வாறு கடுமையாக குற்றம் சாட்டினார் நாயுடு. அவர் பேசுகையில், ஆந்திராவில் மரி சென்னா ரெட்டி, கோட்லா விஜயபாஸ்கர் ரெட்டி, ஜனார்த்தன் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு முதல்வர்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இதுவரை இருந்த முதல்வர்களிலேயே மிகவும் மோசமானவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிதான். கட்சி தொண்டர்கள் கொள்ளையடிக்க அனுமதித்தார். ராஜசேகர ரெட்டி மாநிலத்துக்கு ஏற்படுத்திய சேதத்தை போல எந்த முதல்வரும் ஏற்படுத்தவில்லை.
அவரது ஆட்சி காலத்தில் இருந்த அரசு அதிகாரிகள் இப்போது ஜெயிலில்தான் இருக்கிறார்கள். அவர் மாநிலத்தையே 30 வருடங்களுக்கு பின்னெடுத்து சென்று விட்டார். அதிலிருந்து மீள நாம் முயல வேண்டும். ஊழலுக்கு எதிராக போராட வேண்டும்.
காங்கிரஸ் ஒரு பயனற்ற கட்சி. 2 வருடங்கள் கூட கட்சியை நடத்த லாயக்கற்றவர்தான் சிரஞ்சீவி. அவர் மக்களுக்காக எந்த சேவையும் செய்யவில்லை என்றார்.
நாயுடுவின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரெட்டியை, காட்டுப் பன்றி என்று நாயுடு விமர்சித்ததாக காங்கிரஸார் குற்றம் சாட்டி போராட்டங்களில் குதித்துள்ளனர். ஆனால் இதை நாயுடு மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அப்படி கூறவில்லை. விலங்குகள் பயிர்களை அழிப்பது போல மாநிலத்தை ஒய்எஸ்ஆர் அழித்துவிட்டார் என்றுதான் கூறினேன் என்றார் நாயுடு.
எப்படியோ, ஆந்திராவுக்குப் புதுப் பிரச்சினை கிடைத்து விட்டது!