பாளை பஸ் டெப்போ மீது ராசயனக் கலவை வீச்சு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நெல்லை: பாளையங்கோட்டை கேடிசி நகர் அரசு பஸ் டெப்போவுக்குள் மர்மநபர்கள் அபாயகரமான ரசாயனக் கலவையை வீசி தீப்பிழம்பை உண்டாக்கினர். அந்த சாம்பலை ஆய்வு செய்ததில் அதில் பாஸ்பரஸ் மற்றும் கந்தகம் கலந்திருப்பது தெரிய வந்தது.
பாளையங்கோட்டை கேடிசி நகர் அரசு பஸ் டெப்போவுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் என்று தீப்பிழம்பு உண்டானது. பனை உயரத்துக்கு எழுந்த இந்த தீப்பிழம்பு பின்பு புஸ்வானம் போன்று மறைந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து சம்பவ இடத்தில் கிடந்த சாம்பலை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாம்பல் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் பற்றி காவலாளி பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே சாம்பலை நெல்லையில் பரிசோதனை செய்தபோது அதில் பாஸ்பரஸ் மற்றும் கந்தகம் கலந்திருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள் இதை ராக்கெட் போல் தயார் செய்து டெப்போவுக்குள் வீசியுள்ளனர். அபாயகரமான இந்த ரசாயனக் கலவையை தயார் செய்து வீசியவர்கள் யார் என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. அரசு பஸ்களை தீக்கிரையாக்கும் நோக்கில் இநத சதிச்செயல் நடந்ததா என்றும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளனர்.