கலெக்டரிடம் மனுகொடுக்க மண்ணெய் கேனுடன் வந்த ஆட்டோ டிரைவர் : குடும்பத்துடன் கைது
சேலம்: முறைகேடாக வீட்டை அபகரித்தவரிடம் இருந்து திரும்ப பெற்றுத்தர வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் கேனுடன் மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அம்மாப்பேட்டை குஞ்சான் காடு, முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி புனிதா, மற்றும் குழந்தைகளுடன் மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை சோதனை செய்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தார். பின்னர் அவரை குடும்பத்துடன் அழைத்து சென்று மாவட்ட ஆட்சியர் முன்பு நிறுத்தினர். அப்போது ஆட்டோ டிரைவர் சவுந்தர்ராஜன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், தனக்குச் சொந்தமான 600 சதுரடி நிலத்தில் உள்ள வீட்டினை 26-12-2005 அன்று மாருஷா என்ற நபரிடம் ரூ. 50 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மனைவியின் மருத்துவ செலவிற்காகவும் மேலும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டபோது முறைகேடாக தனது வீட்டின் மீது பவர் எழுதிக்கொண்டு அபகரித்து விட்டதாகவும் சவுந்திரராஜன் கூறியுள்ளார். எனவே தனது வீட்டை மீட்டுத்தரவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மண்எண்ணை கேனுடன் தீ குளிக்க முயன்ற குற்றத்திற்காக சவுந்தர்ராஜன், மற்றும் மனைவி, 3 மகன்களையும் ஜெயிலில் அடைக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.