அடாவடி 'அக்ரி' கிருஷ்ணமூர்த்திக்கு 'முக்கூர்' சுப்பிரமணியம் மூ்லம் ஜெ. வைத்த 'செக்'!
சென்னை: அடாவடித்தனமாகவே செயல்பட்டு வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் கதை முடிந்திருப்பது அதிமுகவினர் மத்தியில் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினரை படாதபாடுத்தி விட்டாராம் இந்த அக்ரி.
ராவணனுடன் கல்லூரியில் சேர்ந்து படித்தவர் அக்ரி. இதனால் நீண்ட காலமாகவே சசிகலா தரப்புடன் நல்ல நெருக்கத்தில் இருந்து வந்தவர். இருந்தாலும் அவருக்கு கடந்த காலங்களில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இருப்பினும் சமீப ஆண்டுகளாக ராவணன், ஜெயலலிதா வட்டாரத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்து வந்ததால் அமைச்சர் பதவிக்காக காத்திருந்தார் அக்ரி. அதன்படி தற்போதைய அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைத்தது.
ஆரம்பத்தில் உணவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் வணிகவரித்துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார் அக்ரி. கடந்த 2006 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது இவர் மட்டுமே திருவண்ணாமலை மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக காரர் ஆவார். இதனால் கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் அதை அவர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு தன் இஷ்டத்திற்கு செயல்பட ஆரம்பித்தார். குறிப்பாக கடந்த திமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஏ.வ.வேலுவுடன் படு நெருக்கமாக இருந்து வந்தார்.
இதுகுறித்து கட்சி மேலிடத்திற்குத் தெரிந்து ஜெயலலிதா கொந்தளித்தபோது கூட இருந்த ராவணன், சசிகலா போன்றோர் அமைதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்து விட்டனராம். மாவட்டத்தில் இருப்பது ஒரே எம்எல்ஏ. அவரையும் நீக்கினால் மாவட்டத்தில் கட்சியே இல்லாமல் போய் விடும் என்று சொல்லியே அமைதியாக்கி விட்டனராம்.
கடந்த சட்டசபைத் தேர்தலிலும் அக்ரிக்கு மீண்டும் சீட் கிடைத்தது. அமைச்சரும் ஆனார். அதன் பின்னர்தான் இவரது ஆட்டம் அதிகரித்தது. திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருந்து வந்த முக்கூர் சுப்பிரமணியம் இவரது பேச்சுக்குக் கட்டுப்படாமல் தீவிர ஜெயலலிதா விசுவாசியாக இருந்து வந்தது அக்ரியின் கண்ணை உறுத்தியது. இதையடுத்து ராவணன் மூலம் முக்கூரிடமிருந்து செயலாளர் பதவி பறி போனது. அது அக்ரிக்கு வந்து சேர்ந்தது.
ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட வடக்கு மாவட்ட செயலாளராக மோகன் நியமிக்கப்பட்டார். அதே வேகத்தில் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்த அக்ரியிடமிருந்து செயலாளர் பதவியைப் பறித்து பாலச்சந்தருக்கு ஜெயலலிதா கொடுத்தார்.
இதையடுத்து சசிகலா குரூப் வேட்டையாடப்பட்டது. பின்னர் ஜெயலலிதா வைத்த விசாரணையில், அக்ரியும் சிக்கினார். அவர் மீதான அத்தனை புகார்களும் தட்டி எழுப்பப்பட்டன. அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
அக்ரி கிருஷ்ணமூ்ர்த்தி கட்சிக்குள் மட்டுமல்லாமல் வெளியிலும் பெருமளவில் சர்ச்சைகள், புகார்கள் உள்ளன. சமீபத்தில்தான் அவருக்கு எதிராக கொலை மிரட்டல் வழக்கு ஒன்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடாவடியாகவே வலம் வந்த அக்ரி நீக்கப்பட்டிருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சிக்கு ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை நீக்க உதவும் என்று அம்மாவட்ட கட்சியினர் நினைக்கின்றனர்.