தமிழக நதிகளை இணைக்க வேண்டும்: ராம. கோபாலன் கோரிக்கை
பொள்ளாச்சி: தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க மாநில அரசு முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ராம. கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்திலுள்ள நதிகளை இணைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மதுரையைச் சேர்ந்த பொறியாளர் காமராஜ் என்பவர், மாநிலத்திலுள்ள நதிகளை இணைப்பது பற்றியும், வலியுறுத்தியும் பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் உள்ள நதிகளை இணைத்தால் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்க முடியும். அதன்மூலம் மாநிலத்தின் மின்தேவை, குடிநீர், பாசன தண்ணீர் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.
சூரிய ஒளி, காற்று, நீர், நிலக்கரி போன்றவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்வதில் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் அணுமின் உற்பத்தியில் எந்தவித பிரச்னையும் இல்லை. இந்நிலையில் வெளிநாட்டிலுள்ள கிறிஸ்தவ அமைப்புகள் மூலம் நிதி பெற்று சிலர் தமிழகத்தில் அணுமின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக போராடுகின்றனர். அவ்வாறு போராடும் நபர்கள், அமைப்புகளின் பின்னணி குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும்.
அணுமின் திட்ட எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அதனால் அணுமின் திட்ட எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். அனைத்து இந்து கோவில்களிலும் தேரோட்ட திருவிழா நடத்த வேண்டும். இந்து கோவில்களில் சமய கல்வி போதிக்க வேண்டும். அறநிலையத் துறையில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
புனித ஸ்தலங்களுக்கு செல்லும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு மானியம் வழங்கிகுவது போல, அமர்நாத், கைலாஷ், காசி, ராமேஸ்வரம் செல்லும் இந்துக்களுக்கும் மானியம் வழங்க வேண்டும். பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்றார்.