குடியரசு தினம்: நாகர்கோவிலில் 210 அடி நீள துணியில் தேசியக் கொடி வரைந்து சாதனை
நாகர்கோவில்: 63வது குடியரசு தினத்தையொட்டி நாகர்கோவிலில் 210 அடி நீள துணியில் தேசியக் கொடியை வரைந்து சாதனை படைத்துள்ளனர்.
குடியரசு தினத்தையொட்டி நாகர்கோவில் ராமவர்மபுரம் கிளப்பில் 210 அடி நீள துணியில் தேசியக் கொடியை வரையும் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அசோக் பத்மராஜ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் கர்மா ஓவிய பள்ளி உரி்மையாளர் மணிகண்டன் மற்றும் அந்த பள்ளியைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் பங்கேற்று வர்ணம் தீட்டினர். பகல் 12 மணிக்கு தேசியக் கொடியை வரைந்து முடித்தனர்.
இதுபற்றி மணிகண்டன் கூறுகையில் 210 அடி நீள துணியில் தேசியக் கொடியை சுமார் 3 மணி நேரத்தில் வரைந்து முடித்திருப்பது கின்னஸ் சாதனை ஆகும். இதற்கு முன் கொல்லத்தில் 153 அடி நீள துணியில் தேசியக் கொடியை வரைந்து சாதனை படைத்திருந்தனர். குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.
ஏற்கனவே நான் 2 அடி உயரத்தில் 1330 திருக்குறள் மூலம் திருவள்ளுவர் உருவத்தை வரைந்து இருக்கிறேன். கடந்த 2003ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் சுயசரிதை மூலம் அவரது ஓவியத்தை வரைந்தேன். 2008ல் 124 மணி நேரம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டினேன். இவை மூன்றுமே லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன என்றார்.