தைப்பூசத் திருவிழா: பழனிக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பழனி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிமலை முருகன் கோவிலுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் முதன்மையானதும், முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடாக விளங்குவது பழனி முருகன் கோவில் ஆகும். அங்கு தைப்பூசத் திருவிழா பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. வரும் 6ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். வரும் 7ம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை முதல்(4ம் தேதி) முதல் வரும் 8ம் தேதி வரை பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வரும் 7ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர், காரைக்குடி, புதுக்கோட்டை, ஈரோடு, கோவை, திருப்பூரில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் விடப்படும்.
அதன்படி 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மேலும் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல், தேனி, பழனி, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், காரைக்குடி, நத்தம் பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு உதவ அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.