வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தியது தான் மின்வெட்டுக்கு காரணம்- ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மின்வெட்டு மீண்டும் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. மின்வெட்டு 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை மின்வாரியம் மறுத்துள்ள போதிலும் சென்னையில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரையிலும் மற்ற மாவட்டங்களில் 8 முதல் 10 மணி நேரம் வரையிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.
மின் தட்டுப்பாட்டை சமாளிக்க இதுவரை வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டது. தற்போது மின்வாரியத்தின் நிதி நிலையை காரணம் காட்டி வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டதுதான் மின்வெட்டு அதிகரித்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மின்வெட்டைக் கண்டித்து தொழில்துறையினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்த தொடங்கியுள்ள நிலையில் நிலைமை மோசமடைவதைத் தடுக்க மின்வெட்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
மின்சாரம் என்பது அடிப்படை தேவை. இதை தடையின்றி வழங்குவதை சேவையாக கருத வேண்டும். லாபம் ஈட்டும் தொழிலாக பார்க்கக் கூடாது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.
முதல் கட்டமாக மின்வெட்டின் நேரத்தை குறைக்க வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த நேரத்தில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
அடுத்தகட்டமாக மின்வெட்டை அடியோடு ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை வலியுறுத்தி மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பெறுதல், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் கூறியுள்ளார் ராமதாஸ்.