ஆளுங்கட்சியை எதுத்து தீயா வேலை செய்யணும்யா! - கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை
அருப்புக்கோட்டையில் தேமுதிக நகர பொறுப்பாளர் சங்கரலிங்கம் இல்ல திருமண விழா நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். இந்த விழாவில் அவர் அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்ட தேமுதிகவினரும் அதையே விரும்புவதாக கட்சியினர் விஜயகாந்திடம் தெரிவித்துள்ளனர்.
ரகசிய ஆலோசனை
இது குறித்து தென்மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மதுரை சென்றுள்ள விஜயகாந்த். திருப்பரங்குன்றம் அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸில் தென் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்து வருகிறார்.
சட்டசபையில் நடந்த விவகாரத்தையும், அதன்பிறகு அதிமுக அரசை தொடர்ந்து எதிர்த்து வருவது பற்றி தென்மாவட்ட மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. சட்டசபையில் நடந்த செயலால் தேமுதிக மீது தவறான அபிப்ராயம் ஏற்படவில்லை. இதனால் யாருடைய தயவும் இல்லாமலேயே தேமுதிகவை பெரிய அளவில் கொண்டுவந்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். மேலும் விலையேற்றம், மின்வெட்டால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வருவதால் மக்கள் தேமுதிக மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தேமுதிக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இனிமேதான் நாம் ரொம்ப தீவிரமா வேலை பாக்கணும். நீங்க எந்த அளவு தீவிரமா இறங்கறீங்களோ, அந்த அளவு நமக்கு வாக்கு பலம் கூடும் என்றாராம் விஜயகாந்த்.
மேலும் திருமண விழாவில் அரசுக்கும், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் விஜயகாந்த் அனல் கக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.