புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கான தடை நீட்டிப்பு
சென்னை : புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் தமிழகர அரசின் நடவடிக்கைக்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
வழக்கறிஞர் வீரமணி தொடர்ந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் முருகேசன், ஜனார்த்தனராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று நடைபெற்றது. விசாரணையின் போது ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர், இவ்வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அடுத்த விசாரணை மார்ச் 12-ந் தேதி நடைபெறும் என்றும் அதுவரை ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு என்ன?
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல நூறு கோடி ரூபாய் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டமும் புதிய கட்டிடத்தில் நடைபெற்று வந்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணா தி.மு.க., தலைமைச் செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றியது.
மேலும் கைவிடப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதையடுத்து மருத்துவமனையாக மாற்றும் பணிகள் தொடங்கின.
ஆனால் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் பணிகள் நடைபெறுவதாக வழக்கறிஞர் வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் அனுமதி பெறாமல் பணிகளைத் தொடர அவர் தடையும் கோரியிருந்தார். இதை ஏற்று உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனும், தமிழக அரசு அனுமதி கோரி எந்த ஒரு கடிதமும் அனுப்பவில்லை என்று அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது