சொத்தை மோசடியாக மகன் பறித்து விட்டதாக 95 வயது மூதாட்டி புகார்!
கோயம்புத்தூர்: தமது சொத்தை மோசடி செய்து விற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் 95 வயதான மூதாட்டி புகார் கொடுத்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஆட்சியர் கருணாநகரிடம் கோவை முத்துக்கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்த ராயம்மாள் (95) என்ற மூதாட்டி கொடுத்த மனு விவரம்:
எனக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். எனக்கு பாத்தியப்பட்ட 13/4 ஏக்கர் நிலம், எனக்கும் எனது வாரிசுகள் அனைவருக்கும் சம உரிமை என்று உள்ளது.
இந்த நிலையில் எனது 3 வது மகன் திருமூர்த்தி என்னை ஏமாற்றி கையெழுத்து பெற்று மோசடி செய்து ரூ.60 லட்சத்துக்கு விற்று விட்டார்.
பொதுவாக இருந்த சொத்தை வாரிசுகள் யாருக்கும் கொடுக்காமல் திருமூர்த்தி ஏமாற்றி விட்டார். இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.