8 மணிநேரம் மின்வெட்டு: நெல்லை மாவட்டத்தில் 'இன்வர்ட்டர்' விற்பனை அதிகரிப்பு
தமிழகத்தில் அதிகரித்து வரும் எலக்ட்ரானிக் பொருட்களின் உபயோகம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மின் தேவை அதிகரித்து வருகிறது. மின் தேவையை சமாளிக்க போதிய மின் உற்பத்தி இல்லாததால் ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்திலும் விசைத்தறி கூடங்கள், நெல் அரவை ஆலைகள், சுண்ணாம்பு ஆலைகள், நூற்பாலைகள் மற்றும் மின்சாரத்தை நம்பியுள்ள சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கும் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களிலும் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதால் அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமலும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் இரவில் தூக்கமின்றியும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடைகாலம் துவங்கும் முன் மின்வெட்டு நேரம் 8 மணி நேரமாக அதிகரித்துள்ளதால் ஏப்ரல், மே, மாதத்தில் இந்த நேரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்க வசதி படைத்தவர்கள் தங்களது வீடுகளில் இன்வர்ட்டர்களை வாங்கி பொருத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் பேட்டரி கடைகள், ஆட்டோ மொபைல் கடைகளில் இன்வெர்ட்டர் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும் மின்வெட்டால் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.