சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ் மோதி அதிமுக நிர்வாகி பலி, 3 பேர் காயம்
திருச்சி: திருச்சியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் மோதி காய்கறி வியாபாரி ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்திற்கு காரணமான பஸ் மீது கல்வீசிய போது, பாதுகாப்பிற்கு நின்ற இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலையில் தனியார் பஸ் ஒன்று ஸ்ரீரங்கத்தை நோக்கி புறப்பட்டது. பஸ்சை லால்குடியைச் சேர்ந்த பாலாஜி(27) என்பவர் ஓட்டினார். பீமா நகரில் உள்ள திருமண மண்டபம் அருகே பஸ் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில் பஸ் நிறுத்தத்தில் நின்ற கல்லூரி மாணவி பர்ஷானா(22) மீது பஸ் மோதியது. அதன்பிறகு செல்வவிநாயகர் கோவில் திருப்பத்தில் பஸ்சை ஓட்டுநர் வலது புறமாக திருப்பிய போது மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ்(35), அவரது மகன் பாலாஜி(7), தள்ளுவண்டியில் காய்கறிகளை ஏற்றி வந்த அதிமுக நிர்வாகி சக்திவேல்(56) உள்ளிட்டோர் மீது மோதியது. பஸ் ஓட்டுனர் உடனடியாக பஸ்ஸை விட்டு இறங்கி ஓடிவிட்டார்.
அதன்பிறகு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் மீது மோதி பஸ் நின்றது. இவ்விபத்தில் சிக்கிய சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் கூடிய அப்பகுதியைச் சேர்ந்தவர்களில் சிலர், விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினர்.
அப்போது பஸ்சிற்கு காவல் நின்ற பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலையில் சில கற்கள் விழுந்து காயமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன்பிறகு பாலக்கரை பிரபாத் சந்திப்பில் கூடிய பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும். திருச்சியில் ஓடும் நகர பஸ்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். திருச்சியில் தனியார் பஸ்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே அவர்களை சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு பொதுமக்கள் மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதாக 7 பேரையும், கல்வீ்ச்சில் ஈடுபட்டதாக 4 பேரையும் பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.