விஜயகாந்த் மீதான புகார் மீது என்ன நடவடிக்கை?-தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சமீபத்தில் சட்டசபையில் நடந்த கடும் அமளியைத் தொடர்ந்து தேமுதிகவை கடுமையாக சாடிப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா, பகிரங்க சவாலும் விட்டார். மேலும் விஜயகாந்த் சட்டசபையில் நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து அவர் பத்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக சாடிப் பேசினார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக வக்கீல்கள் பிரிவைச் சேர்ந்த ஞானமுத்து என்ற வக்கீல் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியுள்ளார் விஜயகாந்த். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் ஞானமுத்து. அந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விஜயகாந்த் மீது மனுதாரர் கொடுத்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை நாளைக்குள் காவல்துறை விளக்க வேண்டும்.
மனுவைப் பதிவு செய்துள்ளனரா, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.