தந்தை கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில் பாலம் கட்ட ரூ. 1.15 கோடி அளித்தார் கனிமொழி
தனது ராஜ்யசபா உறுப்பினர் தொகுதி நல நிதியிலிருந்து இதை அவர் ஒதுக்கியுள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. தலைவரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி விருப்பத்திற்கிணங்க பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி, தனது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உள்பட்ட கமுக்குடி மற்றும் அபிவிருத்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக ரூ.1 கோடியே 15 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த பாலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த பாலம் அமைவதன் மூலம் அபிவிருத்தீஸ்வரம், சிட்டிலிங்கம், லிங்கத்தடி, வளவநல்லூர், கீழஆதிச்சமங்கலம், கமுக்குடி, திருவரங்கநல்லூர், புரசத்தாங்குடி, புத்தூர்மேல்கரை, அரசமங்கலம், அஸ்கனோடை ஆகிய கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவார்கள்.
இத்தகைய பாலம் இல்லாததால் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் மற்றும் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலம் குடவாசல் வட்டாட்சி அலுவலம் போன்ற இடங்களுக்கு செல்வோரும் 8 கிலோ மீட்டர் தேவையின்றி பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. அந்த பாலம் அமைந்தால் பயண தூரம் 1 கிலோ மீட்டராக குறையும்.
மேற்கண்ட கிராமங்கள் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளதால் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நேரும் போது, மக்களுக்கு உதவ படகுகளில் செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நிவாரண உதவிகள் வழங்குவதிலும் காலதாமதங்கள் ஏற்படுகின்றன. இந்த பாலம் அமைவதன் மூலம் அந்த சிரமத்தையும் தவிர்க்க இயலும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.