மார்ச் 26ல் கூட்டுறவு ஊழியர்கள் சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம்
மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு ஊழியர்கள் வரும் மார்ச் மாதம் 26ம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் மாநில செயல் தலைவர் பொன்.வசந்தன் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டுறவு நிறுவன ஊழியர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். அனைத்து கூட்டுறவு ஊழியர்களுக்கும் அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் மற்றும் இதரப் படிகள், விடுப்பு சலுகைகள் வழங்க வேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடியால் நிலுவைத் தொகை முழுவதையும் விடுவித்து, புதிய பயிர்க் கடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல பொது விநியோக திட்ட ஊழியர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஒருதுறை ஆய்வு, சேதாரக்கழிவு அனுமதித்தல், சீருடைப்படி அனைவருக்கும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.
மேலும் கூட்டுறவு நிறுவனங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். செயல் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பால் கூட்டுறவு, கைத்தறி, வீட்டு வசதி, மீனவர் கூட்டுறவு உள்ளிட்ட கூட்டுறவு நிறுவன ஊழியர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தினக்கூலி, தொகுப்பூதிய முறைக்கு முடிவு கட்டி கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் 480 நாட்கள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 12ம் தேதி முதல் ஒருவார கால பிரச்சார இயக்கம் நடத்துவது என்றும், மார்ச் 26ம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.