தெலுங்கானா இயக்கம் வன்முறை பாதைக்கு திரும்பும்: காங்.எம்பி.எச்சரிக்கை
ஹைதராபாத்: தெலுங்கானா தனிமாநிலம் அமைக்காவிட்டால் வன்முறையை மக்கள் கையிலெடுக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்பி மது கவுட் யாக்ஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
தெலுங்கானா தனிமாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தனிமாநிலம் கோரும் இயக்கம் இங்கே செத்துப் போய்விட்டதாக எவரும் கருதிவிடாதீர்கள்.
தங்களுக்கு அரசியல் கட்சிகளும் அரசுகளும் கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லையே என்ற ஆதங்கமும் தங்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது என்ற குமுறலும் நிச்சயம் வன்முறையாக தெலுங்கானா பகுதியில் வெடிக்க நேரிடும்.
தெலுங்கானா அமைப்பதற்காக இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. உடனேயே தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும்.
கடந்த அக்டோபர் மாதம் எழுச்சியை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த இயக்கங்களின் கூட்டுப் போராட்டம் மீண்டும் வலுவோடு உருவாகும்.
எங்களைப் பொறுத்தவரையில் வன்முறையை விரும்பவில்லை. ஆனால் மக்களை அந்தப் பாதையை நோக்கி இழுத்துச் செல்லாதீர்கள். தெலுங்கானா மாநிலம் அமைந்தே தீரும். அது இப்பொழுதா? பின்னரா என்பது மட்டுமே கேள்வி.
தனிமாநிலத்தை அமைத்தால் மத்திய அரசை தெலுங்கானா பகுதி மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். தெலுங்கானாவை பாரதீய ஜனதா கட்சி ஆதரிப்பதால் அதன் செல்வாக்கு இங்கே அதிகரித்துக் கொண்டிருப்பதை காங்கிரஸ் தலைமை உணர வேண்டும்,
தெலுங்கானா பிரதேச தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதுதான் பெரிய பிரச்சனையே என்றார் அவர்.