பூகம்பம் தாக்கிய மெக்சிகோவில் சிக்கிய ஒபாமா மகள்- ஆபத்தில்லை என தகவல்
வாஷிங்டன் மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அங்கு பள்ளி சுற்றுலா சென்றுள்ள ஒபாமாவின் மகள் மலியாவிற்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று வெள்ளை மாளிகை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் 13 வயதான மூத்த மகள் மலியா ஒபாமா மெக்சிகோ நாட்டிற்கு பள்ளி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு செவ்வாய்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் நிலநடுக்கத்தால் மலியா ஒபாமாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை அவர் பாதுகாப்பாக இருப்பதாக மிக்கெய்ல் ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் கிரிஸ்டினா தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஊடகங்களில் தகவல் ஏதும் வெளியிட வேண்டாம் என முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்த போதும், மலியா ஒபாமாவின் கல்வி சுற்றுலா பற்றி கடந்த திங்கட்கிழமையே சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்ததால் இந்த தகவல் வெளியில் கசிந்துள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒபாமாவின் இரு மகள்களும் பெற்றோருடன் இல்லாது, பொது இடங்களில் தென்படும் போது, அவர்களை புகைப்படமெடுக்க வேண்டாம் என வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.