காவிரி: கர்நாடக முடிவுகளுக்கு மத்திய அரசு ஆதரவு உண்டு- அமைச்சர் முனியப்பா
மங்களூர்: காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசின் பூரண ஆதரவு உண்டு என்று கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான கே.எச்.முனியப்பா கூறியுள்ளார்.
அடுத்து காவிரிப் பிரச்சினை மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கோடைகாலத்தில் கர்நாடகம் அளவுக்கு அதிகமாக தண்ணீர் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனால் கர்நாடக அரசு கோபமடைந்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம். எங்களுக்குத் தேவையான தண்ணீரை நாங்கள் எடுக்கத்தான் செய்வோம். புதிய அணை கட்டுவோம் என்று பேச ஆரம்பித்துள்ளது. கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான குமாரசாமியோ ஒரு படி மேலே போய் தமிழகம் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை வேறு விடுத்துள்ளார்.
காவிரிப் பிரச்சினையை வைத்து குளிர் காய கர்நாடகத்தைச் சேர்ந்த சில அமைப்புகளும் கூட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கர்நாடகத்தின் முடிவுக்கு மத்திய அரசின் ஆதரவு உண்டு என்று மத்திய இணை அமைச்சர் முனியப்பா கூறியுள்ளார். உடுப்பி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு உரிமையை விட்டு கொடுக்கக்கூடாது. இதுவிஷயத்தில் அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசின் ஆதரவு உண்டு என்றார்.
மத்திய அரசு என்று இவர் கூறுவது பிரதமரையா அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவையா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications