தமிழக பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஒன்றுமில்லையே: வைகோ, ராமதாஸ் கருத்து
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாடு 2023 தொலைநோக்குத் திட்டம்” ரூ. 15 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்லர் அறிவித்த திட்டத்தின்கீழ் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ. 1,000 கோடி ஒதுக்கிவிட்டு இலவசங்கள் வழங்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதிலிருந்தே அதிமுக அரசின் தொலைநோக்குப் பார்வை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.3 சதவீதமாக இருக்கும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த வகையில் அந்த இலக்கை எட்டுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
ரூ. 1,500 கோடிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,000/-, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,500/- வழங்கிடுமாறு விவசாயிகள் வைத்த கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. விளைநிலங்களின் பரப்பு குறைந்து வருவது குறித்து அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
தொழில்துறையும், ஜவுளித் தொழிலும் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவில்லை. சென்னையைச் சுற்றியே தொழில்துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. வழக்கம்போல தென் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்குத் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை; புறக்கணித்தே வருகின்றது.
தனியார் அரசு நிர்வாகத்தில் மின் ஆளுமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தப் பணிகளில் ஊழலைக் களைய மின் ஆளுமை நிர்வாகத்தை முழுமையாகச் செயல்படுத்த அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை. கல்வித்துறை, பொது சுகாதாரத் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஒட்டுமொத்தத்தில், இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வழி இல்லாத நிதிநிலை அறிக்கையாகவே அமைந்து இருக்கின்றது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஒன்றுமில்லையே- ராமதாஸ்:
2012-13ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் எதுவுமில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சில நூறு கோடி ரூபாய்களுக்கு வரிச்சலுகைகளை அறிவித்துள்ள நிதி அமைச்சர் 1500 கோடி ரூபாய் அளவுக்கு புதிய வரிகளை விதித்திக்கிறார். பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், காலணி போன்றவை இலவசமாக வழங்கப்படுவது, நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின், கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றிற்கு வரி குறைப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனாலும் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.