விற்பனையை அதிகரிக்க நெருக்கடி- மது பானங்களை ஹோம் டெலிவரி செய்யும் டாஸ்மாக் கடைகள்!
டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் அதிகாரிகள் விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளனர். விற்பனை இலக்கை எட்ட முடியாத கடையின் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் நிலையும் இருக்கிறது. இதைக் கண்டித்து தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன.
இந்நிலையில்தான் அதிகாரிகளின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஈரோடு, பெருந்துறை சாலை, குமலன்குட்டை உள்ளிட்ட இடங்க்ளில் டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ரூ ஆயிரத்துக்கும் மேல் மதுபானங்களை வாங்குவோருக்கு வீட்டுக்கே வந்து இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்காக கடைகளின் முகப்பில் "ப்ரீ ஹோம் டெலிவரி" என்று போர்டு வைத்து தங்களது செல்போன் எண்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த ஹோம் டெலிவரிக்கான லிமிட் என்று 3 கிலோ மீட்டர் தொலைவையும் நிர்ணயித்துள்ளனர். 3 கிலோ மீட்டர் தொலைவுவரை ஹோம்டெலிவரிக்கு டாஸ்மாக் பணியாளர்கள் தயாராக உள்ளனர்.
இதில் பெருங்கொடுமை என்னவெனில் டாஸ்மாக் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துவிட்டே இந்த ஹோம்டெலிவரியை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்!
இப்ப ப்ரீ ஹோம் டெலிவரி என்று அறிவித்துள்ள பணியாளர்கள், மற்ற பொருட்களை விற்பனை செய்ய மேற்கொள்ளப்படுகிற "கவர்ச்சி" திட்டங்களைப் போல மதுபான அளவுக்கு ஏற்பவும் சில திட்டங்களை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
வாட்டர் கேன் சப்ளையைப் போல மது பான விற்பனை மாறி வருவது தமிழ்நாட்டின் சோகம்தான்!