விமான எரிபொருள் விலை மீண்டும் உயர்வு: கட்டணம் விர்.விர்...?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 45 நாட்களில் தொடர்ந்து மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில், ஆயிரம் லிட்டர் (ஒரு கிலோ லிட்டர்) விமான எரிபொருள் விலை ரூ.1,850.96 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.67,800.30 என்ற அளவில் உள்ளது. மும்பையில் விலை ரூ.66,989.74-லிருந்து ரூ.68,806.82-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை விகிதங்கள் மார்ச் 31-ந் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.
பயணக் கட்டணம் உயர்வு?
விமான சேவை நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினத்தில் விமான எரிபொருளுக்கான செலவு 40 விழுக்காடாக உள்ளது. தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. எனினும் இது குறித்து உடனடியாக எந்த ஒரு நிறுவனமும் கருத்து தெரிவிக்கவில்லை.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப விமான எரிபொருள் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கின்றன.