தமிழ்ப் புத்தாண்டுக்கு நெல்லை-தென்காசி அகல பாதை ரயில் சேவை இல்லை

நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகள் கடந்த 2009ல் துவங்கி 2012ல் முடிவடைந்தது. ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மிட்டல் அதிவேக ரயிலில் சோதனை ஓட்டம் மேற்கொண்டார். இந்த வழித்தடத்தில் 70 கிமீ வேகத்தில் ரயில் இயக்கலாம் என அவர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 13ல் ரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ரயில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் திருச்செந்தூர் பயணிகள் ரயில், கோவை பயணிகள் ரயில், நாகர்கோவில் பயணிகள் ரயில் ஆகியவற்றில் பெட்டிகளை குறைத்துவிட்டு அதில் இருந்து கிடைக்கும் பெட்டிகள் மூலம் தென்காசி ரயிலை இயக்கலாம் என அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டத்தையும் அதிகாரிகள் கைவிட்டுள்ளனர். இதையடுத்து நெல்லை-தென்காசி அகல ரயில் சேவைக்கான பெட்டிகளை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் புதியதாக பெட்டிகள் ஒதுக்க இப்போது வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
இதனால் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்த பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications