சுனாமி எச்சரிக்கையால் வெறிச்சோடிய கூடங்குளம் கடற்கரை கிராமங்கள்
வள்ளியூர்: சுனாமி எச்சரிக்கையால் நெல்லை மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடின. பீதியால் ஆலயம் மற்றும் பள்ளிகளில் தங்கியிருந்த மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் நீண்ட நேரம் கண் விழித்திருந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. இதையடுத்து கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.
கூடங்குளம் பகுதியில் உள்ள 12 கடற்கரை கிராமங்களிலும் ஆலய மணி அடித்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் ஆலயம் மற்றும் பள்ளிகளில் தங்கியிருந்தனர். சிலர் பேருந்து, ஆட்டோ, கார்களில் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். இதனால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடல் அலைகள் லேசான ஆக்ரோஷத்தோடு வீசியதால் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் படகுகளை மேடான பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தினர். மேலும் படகில் இருந்த மோட்டார்களையும் கழற்றி தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
ஆலயம் மற்றும் பள்ளிகளில் தங்கியிருந்த மக்கள் சுனாமி பற்றிய தகவல்களை அறிய தொடர்ந்து தொலைகாட்சி செய்திகளை நீண்ட நேரம் பார்த்தபடி இருந்தனர். சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட செய்தி வந்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஆலயம் மற்றும் பள்ளிகளில் தங்கியிருந்த மக்கள் சுனாமி பீதியால் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தனர்.