'நான் எளிமையானவன், சாதாரணமானவன், மனிதர்கள் மீது அன்பு கொண்டவன்'
சட்டிஸ்கர் மாவட்டத்தின் சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான அலெக்ஸ் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரது கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை, திண்டுக்கல்லில் படித்தவரான அலெக்ஸ் பால் மேனன், குறைகுடம் என்ற பெயரில் ஒரு பிளாக்கை வைத்துள்ளார். அதில் தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றிலும் நடப்பவை குறித்தும் எழுதி வருகிறார். அதில்தான் தன்னைப் பற்றிய அறிமுகமாக மேற்கண்ட வரிகளை எழுதியுள்ளார் அலெக்ஸ்.
இரக்க மனமும், நகைச்சுவை உணர்வும் மிக்கவர் அலெக்ஸ். திரைப்படங்கள் மீது நல்ல ஆர்வம் கொண்டவர். ஜப் வி மெட், ஹோலி ஸ்மோக், சுப்பிரமணியபுரம் ஆகியவை இவர் ரசித்துப் பார்த்த சில படங்களாம்.
மக்களுக்கு உதவாத சட்டங்கள் குறித்தும் விதிமுறைகள் குறித்தும் கூட இவர் விரக்தியுடன் எழுதியுள்ளார். கலை, திரைப்படம், இலக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் லீனா மணிமேகலையும், சாரு நிவேதிதாவும்.
இவரது பெயரைப் பார்ப்பவர்களுக்கு அந்த வித்தியாசம் சட்டென புரிபடும். அதுதான் இவரது பெயருடன் இணைந்துள்ள மேனன். இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், எனக்கு ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு்த்துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ணன் மேனன் மீது நல்ல அபிமானம் உண்டு. அதனால்தான் எனது மகன் பெயரில் மேனன் என்ற பெயரைச் சேர்த்தேன் என்றார்.
அலெக்ஸ் பால் மேனனுக்குப் பிடித்த ஒரு மிகப் பெரிய போராளி - சேகுவரா. மாவோயிஸ்டுகள் போன்றோருக்கும் கூட சேர மிகவும் பிடித்தவர்தான்....