திருவள்ளுவர் சிலையை பராமரிக்கக் கோரி தமிழறிஞர்கள் உண்ணாவிரதம்
நாகர்கோவில்: குமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.
தமிழுக்குப் பெருமை சேர்த்த வள்ளுவரை பெருமைப்படுத்த வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும், அரபிக் கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் 133 அடி உயர சிலை அன்றைய முதல்வர் கருணாநிதியால் அமைக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும்.
சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிபடுத்தும் நுட்பமுடையது. பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது. மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க புலவர்களின் வரலாற்றை நமது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தாலும், தமிழுக்கு தன் இரண்டடி குறளால் புகழைத் தேடித் தந்தவர் திருவள்ளுவர். அவரது புகழ் உலகம் முழுக்க பரவி தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
இந்த நிலையில் வள்ளுவர் சிலை முறையான பராமரிப்பு இன்றி உள்ளதாக தமிழ் அறிஞர்கள் மத்தியில் மனக்குறை எழுந்துள்ளது. கடல் உப்புக் காற்றால் வள்ளுவர் சிலை தனது உறுதியை இழந்து வருவதாக கூறப்படுகின்றது. இதனால் திருவள்ளுவர் சிலையை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது.
இந்த உண்ணாவிரத்திற்கு தமிழ் கூட்டமைப்பு தலைவர் புலவர் பச்சைமால் தலைமை தாங்கினார். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன் பேசியதாவது,
திருவள்ளுவர் சிலை உப்புக் காற்று காரணமாக சொரசொரப்புடன் காணப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சிலைக்கு உரிய ரசாயன கரைசல், சிலிகான் பூச்சு போன்றவை பூசி சிலையை அழகு குறையாமல் பாதுகாக்க வேண்டும். சிலையை பாதுகாக்கும் வகையில் தேவையான ரசாயன பூச்சுக்களை பூச வேண்டும்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சிலையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலையை பராமரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.