சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்கு சென்ற பஞ்சாயத்து தலைவர் இன்னும் மாயம்!
நெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்காக சென்ற தனது கணவரைக் காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும் நெல்லையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கலெக்டரிடம் நேற்று புகார் மனு அளித்தார்.
நெல்லை அருகே உள்ள மேலப்பாளையம் நடராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி மஞ்சுளா. மஞ்சுளா தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். கலெக்டர் செல்வராஜை சந்தித்து அவர் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நாங்குநேரி தாலுகா இலையர்குளம் சுடலைமுத்து மகன் ராஜேந்திரன் எனது கணவர் ஆவார். அவர் சிங்கநேரி ஊராட்சி தலைவராகவும் இருந்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அன்று எனது கணவர் என்னிடம் குடும்ப செலவுக்காகவும், நான் 9 மாத கர்ப்பிணியாக இருந்ததால் மருத்துவ செலவுக்கும் ரூ.5,000 கொடுத்துவிட்டு சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். தேர்தல் முடிந்தும் எனது கணவர் மேலப்பாளையம் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 8ம் தேதியன்று எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த தகவலை அவரிடம் தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொண்டபோது
அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் எனது கணவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அஞ்சுகிறேன்.
என் கணவரின் பெற்றோர் வசிக்கும் இலையர்குளத்தில் உறவினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது கணவரை யாரேனும் கடத்தியிருப்பார்களோ என சந்தேகிக்கிறேன். எனவே, அவரை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.