மின் உற்பத்தி அதிகமானதால் காற்றாலைகளை நிறுத்த சொல்லவில்லை: அரசு
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குணசேகரன் ஆகியோர் பேசுகையில், காற்றாலை மின் உற்பத்தி கடந்த சில தினங்களாக அதிகமானதால் மின் வெட்டு குறைந்துள்ளது.
ஆனால் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பெற அடிப்படை வசதி இல்லை. எனவே காற்றாலை உற்பத்தியாளர்களிடம் காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்று அரசு கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதில் உண்மையை அமைச்சர் விளக்க வேண்டும் என்று கோரி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது. இதில் எந்தவித உண்மையும் இல்லை. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால் மின்வெட்டு குறைந்து விட்டதாக உறுப்பினர்களே கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்தும்படி வெளியான செய்தியில் எப்படி உண்மை இருக்கும்?.
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் நிறுவுத் திறன் 6,696 மெகாவாட். புரட்சித் தலைவியின் ஆட்சியில் இந்தியாவிலேயே காற்றாலைகள் நிறுவியதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
காற்றாலைகள் மூலம் முழுமையாக 6,696 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியாது. அதிகபட்சமாக 3,000 முதல் 3,200 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்ய முடியும்.
கடந்த இரண்டு, மூன்று தினங்களாக 1,540 முதல் 2,100 மெகாவாட் மின்சாரம் வரை காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரம் முழுவதையும் பெற தேவையான கட்டமைப்பு மின்துறையிடம் உள்ளது.
எனவே உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. உற்பத்தியை நிறுத்துங்கள் என்று தனியாருக்கு உத்தரவு போடவும் முடியாது. 3,000 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
கடந்த திமுக ஆட்சியில் புதிய காற்றாலைகள் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான கட்டமைப்பு வசதிகளை செய்யவில்லை. தற்போது முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் 400 மற்றும் 230 கிலோவாட் துணை மின் நிலையங்கள் தனியார் மூலம் அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கு துணை மின் நிலையங்கள் அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
இதன் மூலம் 3,000 மெகாவாட்டுக்கும் அதிகமான காற்றாலை மின்சாரத்தையும் பெறுவதற்கான கட்டமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்றார்.