அம்மா நினைத்தால் 'பூஜ்யத்தை'.. கொந்தளித்த தேமுதிக எம்.எல்.ஏக்கள்!
சட்டசபையில் நேற்று, தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இலவச மின்சாரம் தேவையற்றது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு கூறினார். இப்போது இலவச மின்சாரம் தேவையில்லை என்று அவரால் கூற முடியுமா என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார், எங்கள் தலைவர் அப்படி சொல்லவில்லை என்றார். இதையடுத்து அவருக்கும், அமைச்சருக்கும் இடையே கடும் வாதம் மூண்டது.
அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உங்கள் தலைவர், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தேவையில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார். இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து கோஷமிட்டுப் பேசினர்.
அப்போது தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன், ஒரு வார்த்தையைச் சொல்லி, அம்மா நினைத்தால் பூஜ்யத்தை 29 ஆக்கலாம். 29-ஐ பூஜ்யமாக்கலாம் என்று பேசவே, தேமுதிகவினர் கடும் ஆட்சேபனை தெரிவித்து கோஷமிட்டுப் பேசினர். அமைச்சர் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து எழுந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வேண்டுமானால் அமைச்சர் சொன்ன வார்த்தைக்குப் பதில் தயவில் என்று மாற்றிக் கொள்ளலாம் என்றார். அதற்கும் தேமுதிகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் அனைத்து வார்த்தைகளையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். அதன் பிறகே தேமுதிகவினர் அமைதியடைந்து உட்கார்ந்தனர்.